jump to navigation

பெரியகோயில் ஊஞ்சல் – 3 October 19, 2008

Posted by sridharan in oonjal.
trackback

9. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற

திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்

இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல்

இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட

மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலோன்

வானவர் கோன் முதலானோர் மகுட கோடி

நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடிர் ஊசல்

நீளைக்கு மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – இருள் சூழ்ந்த கருமையான இரவுப் பொழுதில், திருக்கோவலூரில் உள்ள ஒரு குடிசையில், “மஹாலக்ஷ்மியைக் கண்டேன், நன்றாக விளங்கும் சூரியன் போன்ற அழகான நிறத்தைக் கண்டேன், சக்கரம் மற்றும் சங்கையும் கண்டேன்”, என்று பாடியவரும், எம்பெருமானை இப்படியாகத் தரிசித்தவரும், தலைவரும் ஆகிய பேயாழ்வார் அருளிச்செய்த உயர்ந்த பிரபந்தத்தை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். மிகுந்த நறுமணம் கொண்ட கொன்றை மலர்களைத் தலையில் அணிந்த சிவன், தாமரை மலரில் அமர்ந்துள்ள நான்முகன், வானவர்களின் அரசனாகிய இந்திரன் போன்றவர்களின் க்ரீடங்கள் வரிசையாக அவர்கள் வணங்கும்போது உன்னுடைய திருவடிகளை நெருக்கியபடி உள்ளன. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக! நீளாதேவியின் நாயகனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

10. நான்முகனை நாரணனே படைத்தான் அந்த

நான்முகனும் நக்கபிரானைப் படைத்தான்

யான் முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று

யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாடப்

பால் முகம் ஆர் வளை நேமி படைகள் காட்ட

பாசடைகள் திருமேனிப் படிவம் காட்டத்

தேன் முகம் மா முளறி அவயவங்கள் காட்டச்

செழும் தடம் போல் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – “நாராயணன் நான்முகனான ப்ரம்மனைப் படைத்தான், ப்ரம்மன் சிவனைப் படைத்தான் என்றும் இத்தகைய முக்கியமான தத்துவம் தெரியப் பெற்ற நான், இதனை என்னுடைய அந்தாதி என்னும் பிரபந்தத்தில் வெளியிட்டேன்”, என்று தொடங்கி உயர்ந்த கருத்துக்களை அனைவருக்கும் திருமழிசையாழ்வார் வெளியிட்டார். இவருடைய உயர்ந்த பிரபந்தத்தை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய திவ்ய ஆயுதங்களைக் காண்பதற்குப் பால் போன்ற நிறம் கொண்ட சங்குப் பூச்சிகள் போன்றும், சக்கரவாகப் பறவைகள் போன்றும் உள்ளன. உன்னுடைய அழகான திருமேனியின் நிறம், பசுமையான தாமரை இலைகள் போன்று உள்ளன. உன்னுடைய திருவடி முதலான உறுப்புகள், தேன் நிறைந்த தாமரை மலர் போன்று உள்ளன. இப்படியாக நீ செழுமையாக உள்ள குளம் போன்று இருக்கிறாய். நம்பெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக.

11. மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும்

மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்

இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள்

இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட

அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட

ஆடகத்தோன் அகம்பரன் என்று அபிமானித்த

பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட

பொன்னி சூழ் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

பொருள் – இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் அறியாமை நீங்குவதற்கும், துன்பங்கள் நீங்குவதற்கும், அறியாமையால் உண்டாகும் மயக்கம் நீங்குவதற்கும், பந்தத்தில் சிக்க வைக்கும் இரு வினைகள் நீங்குவதற்கும், அடியார்களின் துன்பங்கள் விலகுவதற்கும் – குலசேகராழ்வார், “இருள் இரிய”, என்று தொடங்கும் பெருமாள் திருமொழியை அருளிச்செய்தார். இதனை ஊஞ்சல் மண்டபத்தில் பாகவதர்கள் பாடியபடி நிற்கின்றனர். முன்பு இந்த உலகில் கருணை என்பதே இல்லாமல், தர்மம் அழியும்படி, மூன்று உலகங்களையும் ஆட்சி செய்த கர்வத்தால் தானே உயர்ந்த தெய்வம் என்றபடி இரண்யன் இருந்தான். அவனுடைய அந்தக் கர்வம் ஒழியும்படி, அவ்வாறு அவன் கூறிய சொற்கள் ஒழியும்படி, நரஸிம்ஹனாகத் தோன்றி அவனுடைய மார்பைக் கிழித்து எறிந்த அழகியமணவாளா! காவேரியால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதா! ஊஞ்சல் ஆடுவாயாக.

12. அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும்

அலற்றுவார் முன் திருநாரணனே ஆதி

பரன் என்று மறை உரைத்துக் கிழி அறுத்த

பட்டர்பிரான் பாடிய பல்லாண்டு பாடக்

கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற

கண்டகர் ஆருயிர் மடியக் கண்டு இலங்கா

புரம் வென்ற சிலை அரங்கர் ஆடிர் ஊசல்

புகழ் உறையூர் வல்லியோடு ஆடிர் ஊசல்.

பொருள் – அனைத்திற்கும் காரணமான பரமாத்மா சிவனே என்றும், நான்முகனே என்றும், புத்தனே என்றும் பலவாறு பிதற்றியபடி இருந்தனர். இவர்களுக்கு முன்பாக நின்று, ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் தொடக்கமான பரதேவதை என்று வேதங்களை ப்ரமாணங்களாகக் கூறி பாண்டியர் கட்டி வைத்த பொற்கிழியைப் பெரியாழ்வார் அறுத்தார். இவர் அருளிச்செய்த திருப்பல்லாண்டு பாசுரங்களை ஊஞ்சல் மண்டபத்தில் பாடியபடி உள்ளனர். அரன் என்னும் தீயவன், மாரீசன் என்னும் கொடியவன், கவந்தன் என்னும் அசுரன் ஆகியவர்களின் உயிர் நீங்கும்படியாக, அவர்களை அழித்து, இலங்கையை வென்று, வில்லை ஏந்திய பெரியபெருமாளே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிறந்த புகழ் கொண்ட உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்து ஊஞ்சல் ஆடுவாயாக.

…..நாளை தொடரும்

Comments»

No comments yet — be the first.