jump to navigation

பெரிய கோயில் ஊஞ்சல் – 7 October 23, 2008

Posted by sridharan in oonjal.
trackback

25. ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும்

அணி சிலம்பும் அடி விடாது ஊசல் ஆட

வார் அணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும்

வள் துளவும் புயம் விடாது ஊசல் ஆடக்

காரணங்கள் ஆய் அண்டர் அண்டம் எல்லாம்

கமலநாபியில் படைத்து காத்து அழிக்கும்

சீர் அணங்கு மணவாளர் ஆடிர் ஊசல்

சீரங்கநாயகனார் ஆடிர் ஊசல்.

பொருள் – ஸ்ரீரங்கநாதனே! நீ ஊஞ்சல் ஆடும்போது நான்கு வேதங்கள், அடியார்களின் மனம் மற்றும் உனது அழகான சிலம்புகள் ஆகிய பலவும் உனது திருவடிகளை விடாமல் ஆடுகின்றன. நன்கு கட்டப்பட்ட கச்சம் உடைய ஸ்தனங்கள் கொண்ட பெண்களின் கண்கள், வண்டுகள், சிறந்த துளசி மாலை ஆகிய அனைத்தும் உனது அழகான திருத்தோள்களை விடாமல் ஆடுகின்றன. மூன்று வகையான காரணங்கள் ஆகி (நிமித்த காரணம், உபாதாநக் காரணம், ஸஹகாரி காரணம் : பானைக்கு உபாதானக் காரணம் = மண்; நிமித்த காரணம் = குயவன்; ஸஹகாரி காரணம் = சக்கரம்), அண்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அனைத்து அண்டம் ஆகியவற்றைத் திருநாபியில் படைத்து, காத்து, ப்ரளயத்தின்போது உள்ளே இழுக்கின்ற, சிறப்புடைய பெண்ணாகிய ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனே! ஊஞ்சல் ஆடுவாயாக! அழகிய மணவாளனே! ஊஞ்சல் ஆடுவாயாக.

26. அடித்தலத்தில் பரி புரமும் சிலம்பும் ஆட

அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆடத்

தொடித்தலத்தில் மணிமடமும் துளவும் ஆடத்

துணை கரத்தில் சக்கரமும் சங்கும் ஆடத்

முடித்தலத்தில் கருங்குழலும் சுறும்பும் ஆடத்

முகமதியில் குறு வேர்வும் குழையும் ஆடக்

கடித்தலத்தில் அரைநாணும் கலையும் ஆடக்

காவேரி சூழ் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

பொருள் – காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெரியபெருமாளே! உனது திருவடிகளில் கிங்கிணிகள், தண்டைகள் ஆடுகின்றன; அழகான திருமார்பில் கௌஸ்துபமும், ஸ்ரீரங்கநாச்சியாரும் ஆடியபடி உள்ளனர்; திருத்தோள்களில் இரத்தின மாலையும் துளசி மாலையும் ஆடுகின்றன; இரண்டு திருக்கரங்களில் சக்கரமும் சங்கும் ஆடுகின்றன; அழகான திருமுடியில் உள்ள தலைமுடியும், அங்கு உள்ள மலர்களை மொய்க்கின்ற வண்டுகளும் ஆடுகின்றன; முழுநிலவு போன்ற திருமுகத்தில் வியர்வைத் துளிகளும், காதணிகளும் ஆடுகின்றன; அழகான இடுப்பில் அரைநாண் கயிறும் திருப்பரி வட்டமும் ஆடுகின்றன. திருவரங்கனே! இப்படியாக நீ ஊஞ்சல் ஆடுவாயாக!

27. பரந்து அலைக்கும் பாற்கடலுள் பசு சூல் கொண்டல்

படிந்தது எனக் கிடந்தபடி படிமேல் காட்டி

வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி

மண்ணுலகை வாழ வைத்த வளத்தைப் பாடத்

புரந்தரற்கும் பெருமாளே ஆடிர் ஊசல்

போதனுக்கும் பெருமாளே ஆடிர் ஊசல்

அரன் தனக்கு பெருமாளே ஆடிர் ஊசல்

அணி அரங்கப் பெருமாளே ஆடிர் ஊசல்.

பொருள் – ஓங்கி வீசுகின்ற அலைகள் கொண்ட திருப்பாற்கடலில், நீர் கொண்ட கரிய மேகம் கிடந்ததோ என்று எண்ணும்படி விளங்குகின்ற சயன திருக்கோலத்தை, இங்கு நாங்கள் கண்களால் காணும்படிக் காட்டுகின்றாய். இப்படியாக அடியார்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை அளிப்பதாக, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டின் நடுவில் வந்து தோன்றினாய். இப்படியாக உலகில் உள்ளவர்கள் வாழும்படியாகச் செய்த உனது பெருமையைப் பாடியபடி உள்ளனர். இந்திரனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! நான்முகனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! சிவனின் தலைவனே! ஊஞ்சல் ஆடுவாயாக! ஸ்ரீரங்கநாதனே! ஊஞ்சல் ஆடுவாயாக!

28. உடு மாயக் கதிர் உதிரச் சண்ட வாயு

உலகு அலைப்ப வடவை சுட உததி ஏழும்

கெடும் ஆறும் திரிதரு கால் உயிர்கள் எல்லாம்

கெடாது வயிற்றுள் இருத்தும் கீர்த்தி பாட

நெடு மாயம் பிறவி எல்லாம் பிறந்து இறந்து

நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்

தடுமாறி திரிவேனை அருள் செய்து ஆண்ட

தண் அரங்க நாயகனார் ஆடிர் ஊசல்.

பொருள் – நட்சத்திரங்கள் அழிகின்றன; சூரியனும், சந்திரனும் உதிர்கின்றன; ப்ரஸண்ட மாருதம் என்னும் காற்று வீசி உலகங்களை அழிக்கின்றது; வடவாமுக அக்னி என்னும் நெருப்பு அனைத்தையும் அழிக்கின்றது; அனைத்து அண்டங்களும் முழுகும்படி ஏழு கடல்களும் பொங்கிப் பரவுகின்றன. இப்படியாக உள்ள ப்ரளய காலத்தில் அனைத்து உயிர்களும் அழியாதபடி அவற்றை உனது திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கும் கீர்த்தியைப் பாடியபடி உள்ளனர். நீண்ட மாயை சூழ்ந்த பல பிறவிகளில், இறந்தும் பிறந்தும், விண்ணுலகத்திலும் நரகத்திலும் தடுமாறி நான் திரிந்தேன். என் மீது கருணை கொண்டு, என்னை உன்னுடையவன் என்று ஆக்கிக்கொண்ட, குளிர்ந்த ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளே! நீ ஊஞ்சல் ஆடுவாயாக!

…..நாளை தொடரும்….

Comments»

No comments yet — be the first.