ஸ்ரீ தயாசதகம் -108 January 27, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – வருத்தத்தில் உள்ளவர்கள் பற்றும் இடமாகத் திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் அலை பெரிதாக முழங்கியபடி ஓடுகிறது; தடையில்லாமல் திருமலையில் ஓடுகின்ற அருவிகள் பெரும் முழக்கம் செய்தபடி உள்ளன; இவை சாதுக்களுக்குத் தேத்தாங்கொட்டை போன்று உள்ளன. எனது இந்தச் ச்லோகங்கள் எத்தனை குற்றம் கலந்ததாக இருந்தாலும் இருக்கட்டும். இந்தத் துதிகளில் குற்றம் கூறுபவர்களின் சொற்கள் என்ன ஆகும் என்றால் – இப்படியாக உள்ள பலவிதமான முழக்கங்கள் காரணமாக அவர்களது குற்றச்சாட்டுகள் யாருக்கும் கேட்காது. அவ்விதம் யார் காதிலாவது கேட்க, இந்த அலை முழக்கங்கள் இடம் கொடுக்குமா?
விளக்கம் – திருமலையில் திவ்ய தம்பதிகளின் கருணை என்ற அலை பெரும் ஒசையுடன் கொட்டும் அருவிகளில் எப்போதும் ஓடியபடி உள்ளது . தனது ச்லோகங்களில் குற்றம் கூறுபவர்களின் குரல்கள், இந்த அருவிகளின் ஓசையில் அடங்கிவிடும் என்று கூறுகிறார். தயாதேவி அனைத்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவள் என்றாலும், தனது துதிகளின் மீது குற்றம் கூறுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள் என்று வேடிக்கையாக கூறுகிறார்.
ஆயினும் இவ்விதம் குற்றம் சொல்லுபவர்களைத் தயாதேவி, தனது சொற்களைக் காப்பாற்றுவதாகத் தண்டிக்காமல் விட்டு விடுகிறாள் என்றார்; அவர்களது குரலை மட்டும் மறையச் செய்கிறாள்.
தேத்தாங்கொட்டை என்பது தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதாகும். இந்தச் ச்லோகமானது தேத்தாங்கொட்டை போன்று மனதைத் தெளிய வைக்கும் என்றார்.
ச்லோகத்தில் உள்ள ந: என்ற பதம் காண்க. இந்த பதம் நாங்கள் என்ற பொருளைக் குறிக்கும். இதன் மூலம் ஸ்ரீநிவாஸன், அவனது ஸங்கல்பம் மற்றும் தன்னையும் கூறி – எங்கள் மூவரின் இந்தச் ச்லோகம் என்று கூறினார்.
இந்த ச்லோகத்தைத் தொடங்கும்போது தயாதேவியை இறுகிப்போன சர்க்கரை மலையாகக் கூறினார். முடிக்கும்போது தயாதேவியை, தனது ச்லோகத்தைக் கேட்டு “கல்லோல கோலாஹல” என்று – ஓடி வரும் தயாதேவியாகக் கூறி முடித்தார்.
ஸ்ரீ தயாசதகம் ஸம்பூர்ணம்
ஜயதி யதிராஜ ஸூக்தி: ஜயதி முகுந்தஸ்ய பாதுகாயுகளீ ததுபயதந: த்ரிவேதீம் அவத்யயந்த: ஜயந்தி புவி ஸந்த: கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:அலர்மேல்மங்கை திருவடிகளே சரணம்
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
தூப்புல் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ தயாசதகம் -107 January 26, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – அனைத்து உலகிற்கு கடாக்ஷம் அளிக்கவல்ல தாயாகவும், அமிர்தம் போன்று இனியவளும், ஸ்வர்கம் மற்றும் மோக்ஷத்தை அளிப்பவளும் ஆகிய தயாதேவியே! வேங்கடேசன் என்னும் கவி, பக்தியுடன் இவ்விதமாகத் துதித்தார். இந்தத் துதியில் துதிக்கப்பட்ட தயாதேவி இட்டதே சட்டமாக ஸ்ரீநிவாஸனின் ஸங்கல்பம் உள்ளது. இந்தச் ஸங்கல்பம் என்ற கற்பக மரத்திலிருந்து, என்னுடைய புத்தி மூலம் இந்த 100 கனிகள் பெறும் காற்றில் விழுந்தது போன்று உதிர்ந்தன.
விளக்கம் – எந்த ஒரு பலனும் பகவானின் ஸங்கல்பம் மூலமே கிட்டும். அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் என்பது கற்பகம் மரம் போன்று இருந்தாலும், அது தயாதேவிக்கு அடங்கியதாகவே உள்ளது. இந்த ஸ்துதியானது, அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் மூலம், தயை என்னும் காற்று வீசி விழுந்த கனிகள் என்று கூறுகிறார். ச்லோகத்தில் உள்ள ஸ்வர்கம் என்ற பதம் தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்றையும் குறிக்கும். இந்த மூன்றையும், மேலும் மிக உயர்த்த புருஷார்த்தமான மோக்ஷத்தையும் அளிப்பது தயாதேவியே என்று கூறினார். இதில், தான் பக்தியுடன் இயற்றியதாகக் கூறினாலும், பகவத் ஸங்கல்பமே உயர்ந்தது என்று உணர்த்துவதை காண்க.
ஸ்ரீ தயாசதகம் -106 January 25, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – யார் யார் எதனை விருப்பினாலும், அதனை அளிக்கும் வள்ளல் போன்று இந்த நூறு ச்லோகங்களும் அவர்கள் விரும்புவதை அளிக்க வல்லது. இதனை நன்றாக, பாராயணமாகப் படிப்பவர்களை – திருமலை மீது எழுந்தருளி, ஏற்றத் தாழ்வின்றி கடாக்ஷிக்கும் ஸ்ரீநிவாஸனின் தயாதேவியானவள், அவர்களது விரோதிகளை அடக்கி விடுவாள். வேறு கதி இல்லாத சரணாகதர்களின் கூட்டத்திற்குச் சக்ரவர்த்தி என்ற முடி சூட்டுவாள்.
விளக்கம் – அப்யாஸம் என்றால் பலமுறை படிப்பதாகும். ஸம்யக் என்றால் சரியாகப் படிப்பதாகும். ஆக இதனை மீண்டும் மீண்டும் சரியாகப் படிப்பதன் பலனைக் கூறுகிறார். இவ்விதம் படிப்பவர்களை தயாதேவி திருவேங்கடமலையின் மேலே நின்று கொண்டு பார்த்தபடி உள்ளாள். அவர்களுக்குத் தன் கடாக்ஷத்தை வீசியபடி உள்ளாள்.
ஸ்ரீ தயாசதகம் -105 January 24, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – ஸ்ரீநிவாஸனின் எல்லையற்ற தயை குணத்தைக் குறித்து, அவனது கருணையை இலக்காக கொண்டு, இந்த ஸ்துதியானது வேங்கடேசனிடம் இருந்து தோன்றியது. இதில் உள்ள அனைத்தும் உண்மையாக, பொய்யில்லாமல் இருப்பதால், யாரையும் வெட்கம் அடையச் செய்யாதவாறு உள்ளது. அனைத்துச் க்ஷேமங்களையும் அளிக்கவல்ல செல்வமாக உள்ளது. தோஷங்கள் அற்றதாக உள்ளது. இப்படியாக இந்த ஸ்துதி, ஸத்வ குணம் உள்ளவர்களுக்கு இனிமையை அளிக்கும்படி இருக்கிறது.
விளக்கம் – ச்லோகம் 102, 103 ல், இந்த ஸ்துதியை தான் இயற்றியதாகக் கூறினார். ஆனால் ச்லோகம் 104 ல், இந்த ஸ்துதியை தன் மூலமாக ஸ்ரீநிவாஸனே இயற்றியதாகக் கூறினார். “கவிதார்க்கிக ஸிம்ஹம்” என்று பெயர் பெற்றவர் இப்படி முன்பின் முரணாகப் பேசலாமா என்ற வேள்வி எழலாம். அதற்கு இந்தச் ச்லோகத்தில் ஸமாதானம் கூறுகிறார். எப்படி எனில் – இந்த ஸ்துதியை வேங்கடேசன் ஆகிய ஸ்ரீநிவாஸன் இயற்றினான் என்பதும், வேங்கடேசனாகிய ஸ்வாமி தேசிகன் இயற்றினார் என்பதும் ஆகிய இரண்டுமே உண்மையாகுகிறது (ச்லோகத்தில் உள்ள வேங்கடேசன் என்னும் பதம் இருவரையுமே குறிக்கும்).
இங்கு யாருக்கும் வெட்கம் உண்டாகாது என்று ஏன் கூறவேண்டும்? ஒரு வஸ்துவிடம் இல்லாத தன்மையை, அதற்கு இருப்பதாகப் பொய்யாகக் கூறித் துதித்தால் – துதிக்கப்படும் வஸ்து, துதிக்கப்படும் வஸ்துவைத் துதிப்பவர் ஆகிய இருவருக்குமே வெட்கம் ஏற்படும். ஆனால் இந்த ஸ்துதியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருப்பதால் யாருக்கும் வெட்கம் ஏற்படாது என்றார்.
ஸ்ரீ தயாசதகம் -104 January 23, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! எப்போதும் லீலைகள் செய்வதையே ஸ்வபாவமாகக் கொண்டுள்ள ஸ்ரீநிவாஸன், ஏதும் அறியாத இந்தத் தூப்புல் பிள்ளையை, வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் வைத்தான். சரியான நேரத்தில் வீணையைக் கையில் எடுத்து மீட்டுவது போன்று, என்னை இந்த தயாசதகத்தை இயற்ற வைத்தான்.
விளக்கம் – இங்கு ஸ்ரீநிவாஸனை வீணை வித்வானாகவும், தன்னை அவனால் மீட்டப்பட்ட வீணையாகவும் கூறுகிறார். வீணை இனிமையாக ஒலி எழுப்பியது என்றால், அது வீணை வித்வானின் திறமையே அன்றி வீணையின் திறமையால் அல்ல.
அர்ஜுனனைத் தேர்த் தட்டில் ஒரு சாக்கு போக்காக மட்டுமே அமர வைத்து, தானே போர் நிகழ்த்திய கண்ணனைப் போன்று, தன்னை முன் நிறுத்தி, தன் மூலமாக தயாதசகம் இயற்றினான் என்று கருத்து.
தன்னை வேதாந்தாசார்யன் என்று கௌரவித்ததாகக் கூறியதன் பொருள் என்ன? ஒரு முறை திருவரங்கத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த திருஅத்யயன உற்சவத்தை, அத்வைதிகள் – தமிழில் கோவில் உற்சவங்கள் நடத்தக்கூடாது – என்று ஆட்சேபம் செய்தனர். அப்போது நம்பெருமாள் நியமனத்தின் பேரில் அங்குள்ள ஆசார்யர்கள், ஸ்வாமி தேசிகனைத் திருவரங்கத்திற்கு வருமாறு பணித்தனர். நம்பொருமாளின் உத்தரவை ஏற்று திருவரங்கம் வந்த ஸ்வாமி தேசிகன், தனது வாதத்தால் அத்வைதிகளை வென்றார். இதன் மூலம் அத்யயன உற்சவத்தின் மேன்மையை நிலை நாட்டினார். இந்தச் செயலை கண்டு மகிழ்ந்த அழகிய மணவாளன் ஸ்வாமிக்கு – வேதாந்தாச்சாரியன் — என்று விருது அளித்து கௌரவித்தான்.
இங்கு ஸ்ரீநிவாஸனைப் பற்றி கூறும் போது திருவரங்கனை ஏன் கூறவேண்டும்? அமலனாதிபிரானில் – வடவேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் – என்று கூறியதால், ஸ்ரீநிவாஸனே திருவரங்கன் என்பதும், பெரியபெருமாளே ஸ்ரீநிவாஸன் என்பது புலப்படுகிறது.
ஸ்ரீ தயாசதகம் -103 January 22, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! பெரிய கடல் போன்ற உனது பெருமையின் கரையிலேயே வால்மீகி முதலான முனிவர்கள் நின்று விட்டனர். அப்படிப்பட்ட கடலில் நான் இறங்கி, அதன் தரையில் கால் படாமல் மூழ்கியபடித் தவிக்கிறேன். என்னைப் பார்த்து ஸ்ரீநிவாஸனும் பெரியபிராட்டியாரும் சிரிக்கின்றனர். இப்படிப்பட்ட என்னை, நீயே ஆதரிக்க வேண்டும்.
விளக்கம் – ச்லோகத்தில் உள்ள “அதலஸ்ப்ருசம்” என்ற பதம், தரை காண இயலாமல் தவிக்கும் நிலையைக் கூறுகிறது. தங்களது குழந்தை தத்தித்தத்தி நடப்பதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்து சிரிப்பது போல் தனது நிலை கண்டு ஸ்ரீநிவாஸன் சிரித்தான் என்றார்.
இங்கு ஸ்ரீநிவாஸன் தனது மனதில், “நம்மாலேயே தயாதேவியை முழுவதுமாக அறிய இயலவில்லை. இப்படி உள்ளபோது இவன் புரிந்து கொண்டானோ?”, என்று கேலியாகச் சிரிப்பதாகவும் கொள்ளலாம்.
படம் – நன்றி – www.tirumala.org
ஸ்ரீ தயாசதகம் -102 January 21, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! இன்று தொடங்கி இயற்றப்பட்ட ச்லோகம் முதலாக, எல்லையற்ற காலமாக இருந்து வரும் வேதங்கள் உட்பட அனைத்தும் உன்னைப் பற்றிப் புகழத் தொடங்கின. ஆயினும் ஓர் அடி கூட நகராமல் அப்படியே நின்று விட்டன. இப்படிப்பட்ட மேன்மை உடைய உனது விஷயத்தில், குறைந்த புத்தியே உடையவனான எனது இந்தத் துணிவான செயலை நீ பொறுத்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் பொறுமை காட்டும் நீ, உன்னைப் பற்றிய விஷயத்தைத் தொடங்கிய என் விஷயத்திலும் பொறுமை கொள்ளவேண்டும்.
விளக்கம் – அனைத்துக் குற்றங்களையும் தயாதேவி பொறுத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில், தான் (ஸ்வாமி தேசிகன்) துதி பாடியதாகக் கூறுகிறார். அனைத்தையும் அறிந்த வேதங்கள், பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கி – யதோ வாசோ நிவர்த்தந்தே – வாக்கும் மனமும் அவனை எட்ட முடியாமல் திருபுகின்றன – என்று கூறியது. அப்படிப்பட்ட பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கினாலும் மன்னிக்கலாம்; ஆனால் தான் புகழத் தொடங்கியது – பகவானின் குணங்களுடைய பேரரசியாக உள்ள தயாதேவியை என்பதால் மன்னிக்க இயலாத குற்றம் புரிந்ததாக வருந்துகிறார். இந்தக் குற்றத்தை தயாதேவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
படம் – நன்றி www.tirumala.org
ஸ்ரீ தயாசதகம் – 101 January 20, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! எல்லையற்ற மேன்மை உடையதான ஸ்ரீநிவாஸனின் மற்ற திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டு நிற்கும்போது, அவைகளின் தலைவி போன்று இருக்கும் உன்னை நான் துதித்தேன். இதனைக் கண்டு அந்தக் குணங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அவைகள் என்னைக் கொண்டாடின. இதனைக் காணும்போது, உனது பலம் மூலமாக யாருக்கும் அஞ்சாத தன்மை சித்திக்கும் என்பது உண்மையாகிறது.
விளக்கம் – ஸ்ரீநிவாஸனுடைய மற்ற குணங்கள் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அவற்றைப் புறக்கணித்து, தயை குணத்தை மட்டும் புகழ்ந்ததைப் பற்றிக் கூறுகிறார். தயை குணத்தின் மேன்மை காரணமாகவும், தயை குணத்தின் மீது மற்ற குணங்களுக்குப் பொறாமை இல்லாத காரணத்தாலும் அவை தன்னைக் கோபிக்கவில்லை என்றார். இதன் காரணம் – தயாதேவியைத் துதிப்பவர்களுக்கு யார் மூலமாகவும் அச்சம் ஏற்படாது.
ஸ்ரீ தயாசதகம் – 100 January 19, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! இதற்கு மேல் உன்னிடம் விண்ணப்பிக்க வேண்டியது வேறு எதுவும் இல்லை. திருவேங்கட மலையில் மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாஸன் என்னிடம் மிகுந்த அன்பு செய்ய வேண்டும். அவன் பரமபதத்தில் முக்தர்களுக்கு எத்தகைய அனுபவம் அளிப்பானோ, அதனை எனக்கு நீ அருளிச் செய்ய வேண்டும்.
விளக்கம் – தயாதேவி ஸ்வாமி தேசிகனிடம், “கிம் தே பூய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபாஸி (ஸ்ரீஸ்ருதி – 23) – உனக்கு இன்னும் நான் என்ன செய்ய வேண்டும், நீ என்ன விரும்புகிறாய்?”, என்று கேட்டாள். அதற்கு ஸ்வாமி, “பரமபதத்தில் முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை நான் இந்தப் பூமியிலேயே பெற வேண்டும்”, என்றார்.
ஸ்வாமி தன்னுடைய அபீதிஸ்தவத்தில் (20) – ப்ரபோ .. முகுந்த … ரங்கதாம்நி …. வயம் ஸ்வயம் ஸமுதிதம் தவ வபு: ஸதா நிசாமயந்த: த்ரிதச நிர்வ்ருதிம் புவி விந்தேமஹி – ஸ்ரீரங்கநாதா! அழகியமணவாளா! தானாகவே வெளிப்பட்ட உன்னுடைய அற்புதமான திருமேனியை எப்போதும் சேவித்தபடி, முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை, இந்தத் திருவரங்கத்திலேயே வாழ்ந்து நான் பெறுவேனாக – என்று கூறியது காண்க. இங்கு முகுந்த என்ற பதத்தையே பெரியபெருமாளுக்கு உபயோகித்தார். ஆக ஸ்ரீநிவாஸனின் அன்புடனும், தயாதேவியின் கடாக்ஷத்துடனும் திருவரங்கத்திலே வசிப்பது ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம் எனலாம். ஆயினும் ச்லோகத்தில் உள்ள இஹ என்ற பதம் திருமலையையைக் குறிப்பதாக கொண்டு – திருமலையில் வசிப்பதை விரும்பியதாகவும் கொள்ளலாம்.
ஸ்ரீ தயாசதகம் – 99 January 18, 2008
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.add a comment

பொருள் – தயாதேவியே! என் கண் முன்பாக உள்ள பொருள்களைக் கண்டு எனது புத்தி கலங்குகிறது. நீ அதனை அடக்க முயற்சி செய்தாலும் எனது புத்தி மேலும் கர்வம் கொள்கிறது. எத்தனை நீராடினாலும் புழுதியை விரும்பும் யானை போன்றும், எத்தனை உபசாரம் செய்தாலும் மயங்காமல் விளங்குவதும் ஆகிய எனது புத்தியை நீ உனது கடாக்ஷம் என்ற சங்கிலி கொண்டு காட்டுவாயாக.
விளக்கம் – யானையைத் தொட்டு நம் வசப்படுத்த முடியாது, வ்லை வீசிப் பிடிக்க இயலாது. அதற்குத் தெரியாமல், பின்னே வந்து, சங்கிலியால் கட்டியே அதனை அடக்க இயலும். அரண்மனைக்கு அழைத்து வந்து, எத்தனை உபசாரம் செய்தாலும், அந்த சுகத்தைக் காட்டிலும், சுதந்திரமாக திரிவதையே விரும்பும். எத்தனை நீராட்டி வைத்தாலும் புழுதியை மேலே பூசிக் கொள்வதையே விரும்பும்.
மேலே உள்ள யானையைப் போன்று தனது புத்தி உள்ளதாகக் கூறுகிறார். யானை புழுதியை இறைப்பது போன்று, தன் மீது பாவம் என்பதைப் பூசிக் கொள்வதாகக் கூறுகிறார். அநுக்ரஹம் என்ற பதத்திற்கு – கடாக்ஷம், பின்னே வந்து பிடித்தல் – என்று இரு பொருள்கள் உண்டு. த்வத் வாரணம் என்ற பதத்திற்கு – உனது யானை, உன்னை ஒதுக்குபவன் – என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, யானையாகிய தன்னை, பின்னே வந்து சங்கிலியால் கட்டுவதே இயலும் என்றார்.
ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் – யானையானது தன் மீது புழுதியை இறைத்துக் கொள்வது போன்று, பெரியபெருமாள் எனது தாழ்வான துதிகளை ஏற்றுக் கொள்கிறான் – என்பதைக் காண்க. பட்டர் உபயோகித்த – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் – என்ற பதங்களையே ஸ்வாமி தேசிகன் கையாண்டதைக் காண்க.
தான் அருளிச் செய்த யதிராஜ சப்ததியில் (59) – யதி க்ஷோணீ பர்த்து: பாத யுகளம் … மாமக மந: மாதங்க ப்ரதம நிகளம் – ஸ்ரீபாஷ்யகாரரின் அழகான இரண்டு திருவடிகளும் … எனது மனமாகிய மதம் கொண்ட யானையின் முதல் விலங்கு – என்றார்.
இதே கருத்தை, தான் அருளிச் செய்த பகவத் த்யான ஸோபானத்தில் (7) – மே சிந்தா ஹஸ்திநீ பூஷணானாம் ரச்மிபி: த்ருட நியமிதா சித்ரம் ஆலாந – யானை போன்ற தனது மனமானது, திருவரங்கனின் அழகான திருக்கரங்கள் என்னும் மரத்தில், அவன் அணிந்துள்ள திருவாபரணங்களின் ஒளி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்டுவிட்டது – என்றார்.