ஸ்ரீ தயா சதகம் – 65 December 15, 2007
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.trackback
பொருள் – தயாதேவியே! வேடர்களின் தலைவனான குகன், குரங்குகளின் அரசனான சுக்ரீவன், காட்டுப் பெண்ணான சபரி, கிழிந்த உடை அணிந்த குசேலன், கூனியான குப்ஜை, இடைப்பெண்களான கோபிகைகள், மாலை தொடுப்பவன் – இப்படியாகப் பலரது தாழ்வையும், ஸ்ரீநிவாஸனின் உயர்வையும் உன்னுடைய கருணை என்ற வெள்ளம் மூலமாக ஒன்றாக்குகிறாய்.
விளக்கம் – பகவானின் மிகவும் உயர்ந்த குணம் ஸௌசீல்யம் என்பதாகும். இது உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பேதம் பாராமல் அனைவருடனும் கலந்து பழகும் தன்மையாகும். இந்தச் ச்லோகம் மூலம் தயாதேவி பகவானின் இந்தக் குணம் வெளிப்படும்படிச் செய்வதை உணர்த்துகிறார்.
இங்கு இராமாயணத்தில் இருந்து மூன்று உதாரணங்களும், பாகவதத்திலிருந்து நான்கு உதாரணங்களும் கூறப்படுகின்றன. முதலாவதாக கூறப்பட்டவன் குகன் ஆவான். இவன் இராமனால் – எனது தோழன் இவன் – எனப்பட்டவன் ஆவான். அடுத்து சுக்ரீவன் கூறப்பட்டான். இராமன் சுக்ரீவனிடம், “உனக்கு ஒரு ஆபத்து வரும் என்றால், சீதை என்னிடம் வந்து என்ன பயன்?”, என்றான். அடுத்துக் கூறப்பட்டவள் சபரி ஆவாள். இவள், தான் உண்ட பழம் சுவையாக இருந்தால் மட்டுமே இராமனுக்கு அளித்தாள். அதனையும் இராமன் ஏற்றான்.
இராமன் தொடக்கத்தில் இருந்தே மனிதனாகத் தன்னை காட்டிக் கொண்டதால் அவனிடம் இந்த சீல குணம் வெளிப்படுவது வியப்பில்லை. ஆனால் கண்ணன் பிறந்தது, வளர்ந்தது போன்ற ஒவ்வொரு நிலையிலும் தன்னைப் பரம்பொருளாகவே வெளிப்படுத்தினான். அவன் பலரிடமும் இதே சீல குணத்தை காண்பித்தான். அவன் (கண்ணன்) மிக உயர்ந்த நிலையில் உள்ளபோது, தன்னை நாடி வந்த ஏழையான குசேலனுக்கு அளித்த கௌரவத்தில் அவன் சீலம் வெளிப்பட்டது. குப்ஜை என்ற கூனிப்பெண் கம்சனுக்குச் சந்தனம் அரைத்து எடுத்துச் செல்லும் போது, எதிரில் வந்த கண்ணனுக்கு அந்தச் சந்தனத்தை பூசினாள். அவனும் உடனே அவளது ஊனத்தை நேர்படுத்தினான்.
அடுத்து ஏதும் அறியாத, ஆண்டாள் கூறியது போல் – அறிவு ஒன்றும் இல்லா ஆய்குலம் – என்னும் இடையர்களுடன் சரிசமமாகக் கலந்து பழகினான். அடுத்து மதுராவில் மாலை தொடுத்துப் பிழைப்பு நடத்திய மாலை கட்டும் ஒருவன் வீட்டுக்குச் சென்று, அவனைக் கௌரவம் செய்தான். இவை அனைத்தும் தயாதேவியின் செயல்களே ஆகும் என்றார்.
படம் – சீலத்தின் எல்லை வெளிப்பட்ட திருஅவதாரங்கள்.
Comments»
No comments yet — be the first.